கணிப்பொறியாலும் கண் சிவக்கும்!

கண்ணே... மணியே...

கோபத்திலும் தூக்கமின்மையாலும் தூசு விழுந்தாலும் கண்கள் சிவப்பது இயற்கை. இப்படி எந்தக் காரணமே இல்லாமல் சிலருக்கு அடிக்கடி கண்கள் சிவந்து போவதுண்டு. ``கண் சிவக்க வைரஸ் தொற்று, அதிக சூரிய ஒளி என வேறு காரணங்களும் உண்டு’’ என்கிற கண் மருத்துவர் திரிவேணி, அது பற்றி விளக்குகிறார்.

``அடிக்கடி கண் சிவப்பதற்கு  அலர்ஜி, தூசு, நாய், பூனை முதலான வளர்ப்பு பிராணிகளின் ரோமம், பூக்களில் உள்ள மகரந்தத் தூள், ரசாயனம் போன்றவை முக்கிய காரணங்கள்.  இவை கண்களை சிவக்கச் செய்வதுடன்,  கண்களில் அரிப்பையும் உண்டாக்கும். அரிப்பு அதிகரிக்கும்போது, கண்களில் நீர் வடிய ஆரம்பிக்கும்.

கண்நோய் (Conjunctivitis) காரணமாகவும் கண்கள் அடிக்கடி சிவக்கலாம்.  வைரஸ் தொற்று காரணமாக, கண்கள் சிவந்து போகும். அதோடு, இரண்டு கண்களிலும் வலி, உறுத்தல் ஏற்பட்டு, நீர் வர ஆரம்பிக்கும். இந்த நீர் மற்றவர் கண்களில் படும்போது, கண் நோய் பரவும். கருவிழி அல்லது இமைகளில் தூசு மற்றும் பிசிறு (Foreign Body) ஒட்டிக்கொள்வதால் கண்கள் சிவப்படையும். அந்த நேரங்களில்  கண்கள் இமைக்கும்போது உறுத்தல் இருக்கும்.

கண்ணில் ஏதேனும் தூசு விழுந்தால், கண்களை கசக்கக்கூடாது. அப்படி செய்தால், பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு அதிகம். இவர்கள், உடனடியாக குளிர்ந்த நீரால் கண்களை நன்கு கழுவ வேண்டும். பின்னர், கண் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். கண்களைக் கசக்கினாலோ, பெரிய அளவில் பிசிறு அல்லது பூச்சி விழுவதால்,  கண்ணின் வெண்ணிறப் பகுதியில் காயம் ஏற்பட்டு,  ரத்தம் கட்டலாம்.

இதற்கு சுய மருத்துவம் செய்வதை நிறுத்தி, உடனடியாக மருத்துவரை அணுகி  பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டாக்டர்கள், கண்ணில் லென்ஸ், விழித்திரை ஆகியவற்றை பரிசோதனை செய்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவார். பாதிப்புக்குச்  சிகிச்சை எடுத்தால், ஆரம்ப நிலையிலேயே அதனை  தடுக்க முடியும்.

அதிக நேரம் சூரிய ஒளியில் இருந்தால் விழிவெண்படலத்தில் சதை வளர்ந்து கருவிழிக்குப் பரவுவதும் அடிக்கடி கண் சிவந்து போவதற்கு காரணமாகலாம்.  கருவிழியில் புண் (Corneal Ulcer) ஏற்படுவதும் கண்கள் சிவக்க காரணமாக உள்ளது.   கண் அழுத்த நோயால் (Glaucoma) கண்கள் அடிக்கடி சிவக்கும். இந்த நோய் Open Angle, Closed Angle என இரு வகைப்படும். Open Angleல் கண் நோய்க்கான எந்த  அறிகுறியும் இருக்காது. உடலில் ஏற்படுகிற கட்டி, வீக்கம், உடல் தாங்குதிறன் நோய் (Auto Immune Disease) போன்றவற்றாலும் வயதானவர்களுக்கு அடிக்கடி கண் சிவக்கும்.

உதாரணத்துக்கு, மூட்டுவலியால் (Rheumatoid Arthritis) அவதிப்படும் வயோதிகர்களுக்கு அடிக்கடி கண்கள் சிவக்கும். இதனால், கருவிழியில் புண் ஏற்படலாம். பார்வை மங்கும். கண்களில் வலி இருக்கும். அப்போது கண் மருத்துவரிடம் சென்று முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் சிவந்து போவதற்கான சிகிச்சையை ஆரம்பிக்கும்போதே வேறு நோய்களுக்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை அறிய ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

நம்முடைய கண்கள் ஒரு நிமிடத்தில் 14 முதல் 18 வரை  இமைக்கும். கம்ப்யூட்டர் முன் அமர்ந்து அதிக நேரம் வேலை செய்பவர்கள் கண்களை இமைக்காமல்  வேலை செய்வார்கள். அதனால், இவர்களுடைய கண்கள் விரைவில் உலர்ந்து போகும். இதன் காரணமாகவும் கண்கள் சிவக்கும். கருவிழிக்கு ரத்த ஓட்டம் கிடையாது. உடலில் ஆக்சிஜன் குறைந்தால்  மணல் விழுந்த மாதிரி கண்கள் உறுத்த ஆரம்பிப்பதாலும், கண்கள் சிவக்கலாம். எந்தக் காரணமாக இருந்தாலும், சுய மருத்துவம் வேண்டாம்.’’

மூட்டு வலியால் அவதிப்படும் வயோதிகர்களுக்கு அடிக்கடி கண்கள் சிவக்கும்.  இதனால், கருவிழியில் புண் ஏற்படலாம். பார்வை மங்கும். கண்களில் வலி இருக்கும். அப்போது கண் மருத்துவரிடம் சென்று முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்...

-

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan