சிறுநீரக கல் ஏன் வருகிறது?


நாம் வெளியேற்றும் சிறுநீரில் பலவித வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச் சத்துக்கள், சில உயிரிப்பொருட்கள் அடங்கும். இவை இரண்டும் சரியான வீதத்தில் இருப்பதால், தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப் பொருள்களாகவோ, சிறுநீர்பாதையில், பையில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்களால் இவற்றின் வீதங்கள் மாறி சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் சிறுநீர் கற்களாக உருவாகின்றன.

சிறுநீர் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்:


சிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், இயல்பாக உடல் பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர் அருந்தாமை போன்ற காரணங்களாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப்பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்றும் கூற முடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். சிறுநீரில் உண்டாகும் கற்களில் கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கியவைகளே அதிகம் காணப்படுகின்றன.

யூரிக் அமிலம் ரத்தத்தில் 6 மில்லிகிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி குறைபாடுகள் சிலவற்றால் இந்த அளவை தாண்டும் போது மிகுதியான  யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அதுகற்களாக படிவதுண்டு .நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது.

அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட் உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன. சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் கால்சியம் கலந்த மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

யாருக்கு வரும்:


பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த நோய் வரலாம். பெண்களைப் பொறுத்த வரை, 50 வயதைத் தாண்டும் போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு ஒரு முறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.

அறிகுறிகள்:


சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க் குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும் போது இடுப்பைச் சுற்றி தாங்க முடியாதவலி ஏற்பட்டு, கடுமையான வியர்வை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து, எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறும். அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.

சிறுநீரகப்பையில் கற்கல் சேராமல் தடுப்பது எப்படி?


அதிகமான பழங்கள், காய்கறி, பருப்பு உட்கொள்ள வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்த பட்சம் 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள் வகைகள்:


பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக் கொள்ளவேண்டும். வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
 
சேர்க்க வேண்டிய பழங்கள், காய்கறிகள்:


திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, போன்ற பழ வகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். தர்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan