சரும சுருக்கத்தை தவிர்க்க





கதிர்வீச்சு, வெப்பம், தூசு போன்ற சுற்றுச்சூழலில் இருந்து நம்மைக் காக்கவும் உதவுகிறது. மேலும், உடலின் தட்பவெப்ப நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், தொடு உணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. இப்படி, உடலின் சகலத்துக்கும் பயன்படும் சருமத்தை சுற்றுச்சூழல், மரபணு, ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு வெளிப்புற, உட்புற விஷயங்கள் பாதிக்கின்றன.

சருமப் பராமரிப்புக்கான க்ரீம்களை வாங்கிப் பூசுவதும், சிகிச்சைகளை மேற்கொள்வதும் இன்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. பலரும், தரமற்ற க்ரீம்களைத் தடவுவது, மன அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடு, சுற்றுச்சூழல் மாசு, புறஊதாக் கதிர்வீச்சு, மது அருந்துதல், புகைப் பழக்கம் போன்ற பல காரணங்களால், இளமையிலேயே முதுமைத் தோற்றத்தை அடைந்து விடுகின்றனர்.

இளமையைத் தக்கவைக்க வழி சொல்கிறார் மரபியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் சலீம் முகமது.

'சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், பாதிப்படைவதற்கும் வெளிப்புறக் காரணிகள்தான் மிக முக்கியமானது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில், இவை வெறும் 20 சதவிகிதம் அளவுக்கே இருக்கிறது. உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள், நாம் எடுத்துக்கொள்ளும் உணவு, ஆரோக்கியம் இவைதான் 80 சதவிகிதம் தோல் நலத்துக்குக் காரணமாக இருக்கின்றன. நம்முடைய சருமத்தில் கொலாஜன் (Collagen) என்ற புரதம் உள்ளது.

இதுதான் சருமம் பொலிவுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க முக்கியக் காரணம். வயது ஏற ஏற, சருமம் குறைந்த அளவில் கொலாஜனை உற்பத்தி செய்கின்றன. அதேநேரத்தில், 'கொலாஜன் சிதைவு’ என்பது விரைவுபடுத்தப்படுகிறது. கொலாஜன் சிதைக்கப்படும்போது, சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. இன்றைய வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட காரணிகள், கொலாஜன் சிதைவை விரைவுபடுத்துகின்றன. அதிக அளவில் கொலாஜன் சிதைவு என்பது, அதிக அளவில் சருமச் சுருக்கத்துக்கும், சருமம் பொலிவற்ற தன்மைக்கும் வழிவகுக்கிறது.

இந்த கொலாஜன் சிதைவுத் தன்மை, நச்சுக்களின் தாக்கம் போன்றவை மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி, வயதாவதை விரைவுபடுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மரபணுவில் குறிப்பிட்ட 'கோட்’-ல் தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம், வயதாகும் செயல்பாடு விரைவுபடுத்தப்படுகிறது. ஆனால், இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டு இந்த நச்சுக்களில் இருந்து பாதுகாத்து, கொலாஜன் சிதைவைக் கட்டுப்படுத்தி, இளமையில் முதுமைத் தன்மையைக் கட்டுப்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

முதுமையைத் தவிர்க்க முடியாது. ஆனால், அந்தந்த வயதுக்குரிய வசீகரத்துடன் வாழ முடியும். நம்முடைய சருமத்தின் வயதாகும் செயல்பாட்டின் தன்மையை, டி.என்.ஏ பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு மிகவும் பாதுகாப்புடன், இயற்கையான முறையில் முதுமையைத் தாமதப்படுத்தலாம்'' என்ற டாக்டர் சலீம் முகமது, அதற்கான சிகிச்சை முறைகளைச் சொன்னார்.

''ஒருவருடைய சருமத்தின் வயதாகும் தன்மை எப்படி உள்ளது என்பதை 'கம் அலைவ்’ என்ற மரபியல் ஆய்வுப் பரிசோதனை செய்யப்படும்.  முதலில் ஒருவருக்கு சருமம் எப்படி உள்ளது என்பதைக் கண்டறிந்து, அந்தச் சருமத்துக்கு ஏற்றது போன்ற ஃபேஷியல் பரிந்துரைக்கப்படும். அதேநேரத்தில், அவர்களின் உமிழ்நீரை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பிவைப்போம். டி.என்.ஏ பரிசோதனையில், கொலாஜன் சிதைவு மற்றும் சருமத்தைப் பாதிக்கும் நச்சுக்கள் வயதாவதற்குக் காரணமான மரபணுவில், எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது கண்டறியப்படும்.

இதன் அடிப்படையில், நச்சுக்களில் இருந்து பாதுகாப்பது, கொலாஜன் சிதைவைத் தடுத்து இளமையில் முதுமை அடையாமல் இருப்பதற்கான சிகிச்சை திட்டமிடப்படும். அவர்களுக்கான பிரத்யேக ஊட்டச்சத்து திட்டமிடப்பட்டு, ஒருநாளைக்கு ஒரு எஸ்.எம்.எஸ் என்ற அளவில் 270 நாட்களுக்கு அனுப்பப்படும். இதனுடன், அவர்களுக்கு ஏற்ற ஃபேஷியல் க்ரீம் பரிந்துரைக்கப்படும். இதனைச் சரியாகப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் அந்தந்த வயதுக்கான வசீகரத்துடன் வாழ முடியும்' என்றார்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan